சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம்’ என, யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. யாதவ இன வாழ்வுரிமை எழுச்சி மாநாட்டிற்கு, யாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில், யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்